நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு தேவைப்படும் பாதுகாப்புத்துறை நிலத்தை மாற்றித் தர மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
திருச்சி விமான நிலைய முனையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் அதிகரித்து வருவதால் அதன் திறன் முடிந்துவிட்டதாக அவர் கூறினார்.
2010-11ஆம் ஆண்டில் அகன்ற விமானங்கள் மற்றும் சரக்குகள் கையாளுவதை அதிகரிக்க இந்திய விமான நிலைய ஆணையத்தால் முன் மொழிவு வைக்கப்பட்டது.
மேலும், 2025-26ஆம் ஆண்டுக்குள் பயணிகள் திறனை சுமார் 3.52 மில்லியனாக அதிகரிக்கவும் திட்டம் தீட்டப்பட்டது.
அதே போல ஓடுபாதையின் நீளத்தை 12,500 அடியாக நீட்டிக்கவும் முன்மொழியப்பட்டது.
விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்கு தேவைப்படும் சுமார் 345.62 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு 2018ஆம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கியது.
பல்வேறு காரணங்களால் நிலத்தை மாற்றும் செயல்முறை தாமதமாகி வருகிறது.