சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது.
சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடாகும். மலாய் மக்கள், தமிழர், சீனர், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர்.
இதில் தமிழ் பின்புலத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களை சிங்கப்பூர் தமிழர் என்கின்றனர். கி.பி 1800 ஆம் ஆண்டு வாக்கில் காலனித்துவ காலப்பகுதியில், பிரிட்டிஷ் அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினரே, பெரும்பாலான சிங்கப்பூர் தமிழர்கள்.
இதில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்தும் சிங்கப்பூர் வரவழைக்கப்பட்டவர்கள்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருப்பதால், சிங்கப்பூரில் தமிழ் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற மொழியாக இருக்கின்றது.
இத்தகைய பெருமை இருந்தும் சிங்கப்பூர் தமிழர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை சரிவர உச்சரிக்க தவறுகிறார்கள்.
அதிலும் இன்றைய இளைய வயதினரிடையே தமிழ் பேச்சு குறைந்து காணப்படுகிறது. அப்படியே பேசினாலும் உச்சரிப்பில் ஆங்கிலத் தொனி மிதமிஞ்சி இருக்கிறது.
ஆங்கிலத்தை பேசும் பொழுது எந்த ஒரு நாட்டின் உச்சரிப்பு சாயலிலும் பேசாமல், தங்களுக்கென்று ஒரு உச்சரிப்பில் பேசுவதை “சிங்கிலிஷ்” என்று கூறுகிறார்கள் சிங்கப்பூரர்கள். சமீப காலமாக தமிழும் சிங்கப்பூரில் ஒரு தனி உச்சரிப்புக்கு ஆட்படுத்தப்படுகிறது.