சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 435 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய அந்நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் வேலை நிறுத்த உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வேலையிடங்களில் கடந்த ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 25 வரை இரண்டு மாத அமலாக்க நடவடிக்கையை MOM நடத்தியது.
சறுக்கி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயரத்தில் இருந்து விழுந்து ஏற்படும் விபத்துகள் போன்ற ஆபத்துகளை தடுக்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக அது இருந்தது.
கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைத் துறை சார்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட வேலையிடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது 1,491 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பேஸ்புக் பதிவில் MOM கூறியது.
அதில் மூன்று வேலை நிறுத்த உத்தரவுகள் மற்றும் 89 அபராதங்கள் அடங்கும்.
மொத்தம் $186,050 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.
கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள்
மோசமான சுகாதார நடைமுறைகள், சுகாதாரமற்ற தரை நிலைமைகள், ஊழியர்கள் பொருத்தமற்ற காலணிகளை அணிவது மற்றும் உயரத்தில் இருந்து வீழ்ந்து ஏற்படும் அபாயங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை செய்யத் தவறியது ஆகியவை அதில் அடங்கும்.
பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக ஊழியர்கள் புகாரளிக்க வேண்டும் என அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மேலும் நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும் MOM வலியுறுத்தியது.