COVID-19 உறுதிசெய்யப்பட்ட மாணவியுடன் தொடர்பிலிருந்த 47 பேருக்கு தொற்று இல்லை..!!

சிங்கப்பூரில் உள்ள St Anthony’s Canossian உயர்நிலைப் பள்ளியில், கொரோனா வைரஸால் உறுதிசெய்யப்பட்ட மாணவியுடன் தொடர்பில் இருந்த 47 மாணவர்களுக்கும் வைரஸ் பரவவில்லை என்பது மருத்துவச் சோதனையில் உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி, உயர்நிலை நான்காம் வகுப்பில் பயில்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 10) பள்ளியில் உடல் வெப்பநிலைப் பரிசோதனையின்போது மாணவி உடல்நலமின்றி இருந்துள்ளார், உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்ட மாணவி, பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடன் தொடர்பில் இருந்த 47 மாணவர்களுக்கும், பள்ளி ஊழியர்கள் 12 பேருக்கும் கட்டாய தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், தனிமைப்படுத்தும் உத்தரவில் இருக்கும் ஊழியர்கள் மட்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது மற்றும் ஊழியர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பள்ளியில் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயர்நிலை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஜூன் 14 முதல் வழக்கம்போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.