சிங்கப்பூரில் உள்ள 529 பாலஸ்டியர் சாலையில் (529 Balestier Road) உள்ள கட்டடம் ஒன்றில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி, மொழிகள் கற்றுத்தரும் துணைப்பாட நிலையம் ஆகியவை உள்ளன. மேலும், இந்த கட்டத்தின் தரை தளத்தில் மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடை (New Balestier Lighting) மற்றும் உணவகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின் விளக்குகள் விற்பனை கடையில் இன்று (28/06/2022) மதியம் 02.00 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துச் சென்ற சென்ட்ரல் தீயணைப்பு வீரர்கள் (Central Fire Station), சம்பந்தப்பட்ட கடையின் உள்ளே சென்று பொருட்களை வெளியே அப்புறப்படுத்தி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வநதனர். அதன் தொடர்ச்சியாக, நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், கடையில் இருந்த பொருட்களில் சில எரிந்து நாசமாகின.
இதனிடையே, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்னதாக கட்டடத்தில் இருந்து சுமார் 10 பேர் சுயமாக வெளியேறினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை அதிகரித்தது ஏர் இந்தியா நிறுவனம்!
அந்த பகுதியில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், இன்று (28/06/2022) மதியம் 01.45 PM மணியளவில் மின் விளக்கு விற்பனை செய்யும் கடையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.