சிங்கப்பூரில் பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றம், உக்ரேன்-ரஷ்யா போர் ஆகியவை காரணமாக உணவு விலை இவ்வாண்டு பெரிதும் பாதிப்படையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது நடுத்தர வருமானக் குடும்பங்களை அதிகம் பாதிக்கும். தவிர, வெளிநாட்டு பணியாளர்கள் உணவிற்காக செலவிடும் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நிறுவனங்களால் உணவு, தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
தங்களுடைய வருமானத்தை வைத்து, அதிலிருந்து உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வெளிநாட்டு பணியாளர்கள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
சேமிப்பின் பெரும்பகுதி உணவுக்கே சென்றுவிடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான உணவுப் பொருள்களில் 30 விழுக்காடு உணவுப்பொருள்களை உள்ளூரிலேயே தயாரிக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
அந்த நிலையை எட்டிவிட்டால், பணவீக்கத்தின் போது பெரிய அளவில் சிரமம் இருக்காது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உணவு வீணாகாமல் அதை மீட்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
காலாவதித் தேதி கடந்த பிறகு, விற்பனை செய்ய முடியாத நிலையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் உணகள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மீட்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்வோருக்கு அது விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் செங்காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 15லிருந்து 20 டன் உணவை மீட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அந்த உணவுப்பொருள்கள் குப்பையில் வீசப்பட்டிருக்கும்.