குழந்தையின் தலையில் பலத்த அடி ! – நாற்காலியில் இருந்து விழுந்த குழந்தை மயக்கநிலை

baby-chair
மலேசியாவில் உணவகத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று,குழந்தைகளுக்கான நாற்காலியிலிருந்து கீழே விழுந்ததில் அது உயிரிழந்தது.ஜோகூர் பாருவின் தாமான் சுதேரா பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த உணவகத்திற்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் பெற்றோர் அக்குழந்தையுடன் சென்றனர்.அங்கு குழந்தைகளுக்கான நாற்காலியில் இருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழந்ததாக ஜோகூர் பாரு வடக்கு துணை காவல்துறை தலைவர் ஃபரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.

குழந்தையை நாற்காலியில் அமர வைத்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் குழந்தை மேசையை உதைத்தது.இதனால் குழந்தை அமர்ந்திருந்த நாற்காலி கவிழ்ந்தது.நாற்காலி கவிழ்ந்த வேகத்தில் குழந்தையின் தலை தரையில் அடித்தது.தலையில் அடித்தவுடனே சத்தமாக அழுத குழந்தை பின்னர் மயக்க நிலைக்கு சென்றது.

இந்த விபத்தை நேரில் கண்டதாக உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையை உடனடியாக அருகிலிருந்த தனியார் மருந்தகத்திற்கு அதன் தந்தை எடுத்துச் சென்றார்.
ஆனால் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.
இஸ்கந்தர் புத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்ற போது அங்குள்ள மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.
குழந்தையின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்தில் குற்றவியல் தடயங்கள் தென்படவில்லை என்றாலும் குழந்தையின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.