சிங்கப்பூரில் இருந்து ஜொகூர் பாருவுக்கு செல்லும் பயணிகளுக்கு, ஜனவரி மாதத்திற்கான அனைத்து VTL பேருந்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
சீனப் புத்தாண்டுக்கு முன் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு மலேசியர்கள் ஆர்வம் காட்டியதால், “காஸ்வே லிங்க்” பேருந்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் மாறுபாடு குறித்த கவலைகளைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி வரை பேருந்து டிக்கெட் விற்பனைக்கு தடை என்று நேற்று (டிசம்பர் 22) அறிவிக்கப்பட்டது.
சீனப் புத்தாண்டு முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் பயணத் திட்டத்தை மேற்கொள்ள விரும்பிய பயணிகள் ஜனவரி மாதம் கடைசி 10 நாட்களை பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
டிக்கெட்டுகளுக்கான போட்டி தொடங்கியதை அடுத்து, இந்த வழித்தடத்தில் இயங்கும் இரண்டு பேருந்து நிறுவனங்களில் ஒன்றான “காஸ்வே லிங்க்”, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 31க்கு இடையில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு செல்லும் பயணிகளுக்கான டிக்கெட்டுகளை சில மணிநேரங்களில் விற்று தீர்த்தது.
ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு அதே காலகட்டத்திற்கு இன்னும் டிக்கெட்டுகள் உள்ளன என்று காஸ்வே லிங்க் செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.