கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் பொது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி (அல்லது) சோப்பு போட்டு கழுவ வேண்டும். வயதானவர்கள் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தற்போது கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆயுதமான கொரோனா தடுப்பூசியைத் தகுதி வாய்ந்த அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியை எவ்வளவு விரைவாக மக்களுக்கு செலுத்தப்படுகிறதோ, அப்போதுதான் இனி வரும் காலங்களில் கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முடியும் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டக் காரணத்தினால், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது இந்திய மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவைத் தொடர்ந்து மலேசியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi International Airport) பணியாற்றும் ஊழியர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது விமான நிலைய நிர்வாகம்.
அதன் ஒரு பகுதியாக, இன்று (04/06/2021) சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பிபிஇ கிட் (Personal Protective Equipment- ‘PPE’) எனப்படும் முழு கவச உடையை எவ்வாறு அணிய வேண்டும், கையுறை மற்றும் ஃபேஸ் ஷீல்டு (Face Shield), சானிடைசர் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் விமான நிலைய ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய உதவுவதுடன், பரந்த சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.