சேனல் நியூஸ் ஏசியாவின் (Channel News Asia – CNA) ஒளிப்பதிவாளர் கைருல் அஸ்மான் ஜைனுதீன் நேற்று (ஜூன் 5) பிற்பகல் நடந்த விபத்தில் உயிரிழந்தார் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து, கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் KM43 தொலைவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
45 வயதான கைருல் அஸ்மான் கோலாலம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக பென்டாங் வட்டார காவல்துறைத் தலைவர் சைஹாம் கஹார் தெரிவித்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சைஹாம் கூறினார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பான் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
அதன் பின்னர் அவர் எதிர் பாதையில் தூக்கி எறியப்பட்டார் எனவும், பின்னர் அப்பாதையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதாகவும் சைஹாம் தெரிவித்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரின் பின்னால் அமர்ந்து வந்தவரும் லேசான காயத்துடன் பென்டாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.