தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் செலவில், பன்னடுக்கு வாகனம் நிறுத்துமிடம், வணிக வளாகம், திரையரங்கம் ஹோட்டல்கள், கடைகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்த விமான நிலையத்தில் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஆனந்த் ராஜ், சதீஷ் மற்றும் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் மல்டிபிளக்ஸ் திரையரங்கைத் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, திரைப்படங்களின் முன்னோட்டங்கள் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள ஐந்து திரையரங்குகளில், ஒரே நேரத்தில் 1,155 பேர் அமர்ந்து திரைப்படங்களைக் கண்டுக்களிக்கலாம். விமானத்திற்காக, காத்திருந்து சலிப்படையும் பயணிகளுக்கு சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாக, இந்த திரையரங்கம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.