கடும் வெயிலில் வேலை பார்ப்பவர்கள்,ராணுவ வீரர்கள்,விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.அளவுக்கு அதிகமாக வெயிலில் உழைப்பதால் வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வெளிப்புறங்களில் கடுமையாக உழைக்கக்கூடிய இத்தகைய பிரிவினர் உட்கொள்ளும் உணவுகள்,சுகாதார ஊட்டச்சத்துகள்,சரிவிகித உணவு ஆகியவற்றை முறையின்றி சாப்பிட்டால் வெயில் தாக்கத்துக்கு ஆளாகக்கூடிய ஆபத்து அதிகமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் போன்ற பலரும் உடம்பில் உத்வேகத்தை அதிகரிக்க ரசாயனம் கலந்த பானங்கள்,ஜெல் போன்றவற்றை உடற்பயிற்சிக்கு உட்கொள்வது இயல்பாகிப் போனது.உடலில் கார்போஹைட்ரேட் சேர வேண்டும் என்பதற்காக அவர்கள் அதை உட்கொள்கின்றனர்.ஆனால் இவற்றை அளவுக்கு மீறிச் சாப்பிடுவதால் வாந்தி,வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் வெப்பத்தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும்.நீண்ட தூரம் ஓடுபவர்கள்,ராணுவ வீரர்கள்,கட்டுமானப் பணியாளர்கள் உள்ளிட்ட வெயிலில் நீண்ட நேரம் பணிபுரியும் பணியாளர்களை வெப்பம் அதிகளவில் தாக்கும்.இதனால் வெப்பத் தாக்குதல் ஆபத்து அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.