சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் சற்று குறைந்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
முதியவர்களில் ஒரு சிலர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள இன்னும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
சிங்கப்பூரில் COVID-19 தினசரி நிலவரங்கள் வெளியிடுவதில் மாற்றம் செய்யப்படும் – MOH
இந்த நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் 62 வயது முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் 20- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (Singapore General Hospital) அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று அந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது.
கொரோனாவால் உயிரிழந்த முதியவருக்கு புற்றுநோய், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற இணைநோய்கள் இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (09/09/2021) மட்டும் புதிதாக 450 கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,039 ஆக உயர்ந்தது.