COVID-19 நோய்த்தொற்று சூழலில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது வரும் 7ஆம் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) அத்தியாவசிய சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று அதிகரிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், நாடு ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் லீ (ஏப்ரல் 3) கூறினார்.
பெரும்பாலான வேலையிடங்களை மூடுவது மற்றும் பள்ளிகளுக்கான முழு வீட்டில் இருந்து கற்றல் ஆகியவை இதில் அடங்கும் என்று பிரதமர் கூறினார்.
“கடந்த வாரங்களில், பாதுகாப்பான இடைவெளி குறித்த நடவடிக்கைகளை படிப்படியாக வலுப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதில் உணவுக் கடைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பொதுப் பயனீட்டுச் சேவைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிச் சேவைகள் ஆகிய பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும், தங்கள் வீட்டுக்கு வெளியே மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மட்டுமே வெளியில் செல்ல வேண்டும், என்றார்.
ஊழியர்களுக்கு சாத்தியம் என்றால், வீட்டிலிருந்து வேலைபார்க்கவும் அவர் வலியுறுத்தினார். ஆனால் கட்டுமானத் தளங்கள், கப்பல் பட்டறை போன்றவற்றில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்டோர் அவ்வாறு செய்ய இயலாது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அவர்களின் தங்குமிடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.