சிங்கப்பூரில் இந்தாண்டின் முதல் பாதியில் பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்,மனிதவள அமைச்சகம் பணியிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்தல்,பாதுகாப்பு குறைபாடுடன் இயங்கும் நிறுவனங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தற்போது சிங்கப்பூரில் பணியிட மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.ஆனாலும்,செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை ஏற்பட்ட நான்கு வேலையிட உயிரிழப்புகளும் வாகன விபத்துகளால் ஏற்பட்டவை என்பது வேதனைக்குரியதாகும் என்று மனிதவள மூத்தத் துணை அமைச்சர் சாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
பாசிர் பஞ்சாங் முனையத்தில் நேற்று நடைபெற்ற வாகனப் பாதுகாப்புக் கருவிகளைக் காட்சிப்படுத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது குறித்து பேசினார்.ஜியோடிஸ் நிறுவனத்தின் சென்சார் பொருத்தப்பட்ட பாரந்தூக்கியானது நேற்றைய நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இது போன்று ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் வேலையிடங்களில் செயல்படுத்துவது குறித்த புரிதலை நிறுவனங்களுக்கு அளிக்கும் என்று அவர் கூறினார்.மேலும்,இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.