சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்கள் குறித்த தகவல் ஒன்றினை உள்துறை துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) நாடாளுமன்றத்தில் நேற்று (7 பிப்ரவரி) வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் சுமார் 1000 கலவரங்கள் குறித்துப் புகார்கள் வந்துள்ளன.
கிடைத்துள்ள தரவுகளின்படி, 2020, 2021 ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அத்தகைய அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவலானது நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை (Murali Pillai) அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடம் குறித்து திரு முரளி பிள்ளை கேள்வி எழுப்புகையில், இதுவரை நடந்த கலவரங்களில் இனவெறி தென்பட்டதா என்று வினவியுள்ளார். அதற்குத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் இனவாதத் தூண்டுதலால் சம்பவங்கள் நடந்ததாக எந்தப் புகாரும் வரவில்லை என்று பதிலளித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் இடங்களில் கலவரங்களை அல்லது சண்டைகளைக் குறைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தை நிர்வகிப்பவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறியுள்ளார்.