சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 12) பிற்பகல் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அருகிலுள்ள கட்டுமான தளத்தில் இருந்து புகுந்த தண்ணீர் தானா மேரா MRT ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ரயில் ஆபரேட்டர் SMRT நிறுவனம் தெரிவித்தது.
இது தொடர்புடைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது, அதில் நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகள் கணுக்கால் அளவு நீரில் அலைவதைக் காண முடிந்தது.
நவ.12 ஆம் தேதி மதியம் 3 மணியளவில், தானா மேரா MRT நிலையத்திற்கு அடுத்துள்ள கட்டுமான தளத்தில் இருந்து மழை நீர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வெள்ளத்தை ஏற்படுத்தியது என்று SMRT ரயில்களின் தலைவர் லாம் ஷீவ் கை கூறினார்.
துப்புரவு ஊழியர்கள் மற்றும் கட்டுமானத் தளத் ஊழியர்களுடன் இணைந்து SMRT ஊழியர்கள் தண்ணீரை உடனடியாக வெளியேற்றியதாக திரு லாம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, அந்த கட்டுமான தள மேற்பார்வையாளர்களுடன் SMRT இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.