தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 10,000 ஆப்பிள் பழங்களை, கிட்டதட்ட சிங்கப்பூரில் உள்ள 30 தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுத்து ஆதரவு அளிக்கும் விதமாக கோவிட்-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணி தொண்டூழிய அமைப்பு ஏற்பாடு செய்தது.
பொதுமக்கள் அளித்த நன்கொடையினால் வாங்கப்பட்ட இந்த ஆப்பிள் பழங்கள், கிட்டதட்ட 50 தொண்டூழியர்களை வைத்து விநியோகம் செய்யப்பட்டதாகவும், இச்செயலால் நாங்களும் சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதையும், தங்களை கவனிக்கவும் சிலர் இருப்பதாகவும் வெளிநாட்டினர் கருதக்கூடிய நற்செயலாக இது அமையும் என தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்த ரெனிடா சோஃபியா கிரிஸ்டா (வயது 37) என்பவர் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்வு – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!
மேலும், அக்குழுவின் இணை நிறுவனரான அவர், இந்த ஆண்டின் தேசிய தினக் கருப்பொருள் வலுவடைந்துள்ளதாகவும், அதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவதை ஊக்கப்படுத்தவும், அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அவர்களுக்கு நன்கொடைகளை வழங்கவும் முடிவெடுத்ததாக தெரிவித்தார்.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த “சர்க்யூட் பிரேக்கர்” விதிக்கப்பட்டபோது, இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாமிசம், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவர்கள் உடல்நலனைப் பேணும் விதமாகவும், உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒவ்வொரு ஊழியருக்கும் இரண்டு ஆப்பிள் பழங்கள் வீதம் வழங்கப்பட்டன. அதனுடன் சத்தான உணவுகளைப் பற்றிய குறிப்பேடும் கொடுக்கப்பட்டது.
இக்குறிப்பேடு செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு அளித்திருக்கும் பெறும் பங்களிப்பிற்காக அப்பள்ளி இந்த நற்செயலில் இறங்கியுள்ளது.