காம்பாஸ் அவென்யூவில் நேற்று முன்தினம் ஏப்ரல் 10, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 24 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இறந்த ஆடவரின் மனைவி 3 மாத குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார் என்பது நமக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது.
ஊக்கத்தொகை
ஃபுட்பாண்டா ஊழியரான அவர், ஊக்கத்தொகையைப் பெறுவதற்காக அன்று மட்டும் கூடுதலாக மேலும் 13 ஆர்டர்களை முடிக்க வேண்டும் என முயன்றார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஜேசன் டான், அன்று காலை 9 மணிக்கு எழுந்துள்ளார். நேரம் தாமதமாகிவிட்டதால் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவரது மனைவி வற்புறுத்தியுள்ளார்.
ஆனாலும், அதனை கேட்காமல் தன்னுடைய குழந்தைக்காக அதிக பணம் தாம் சம்பாதிக்க விரும்புவதாக கூறி அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
திருமணம்
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்கள் சொந்த இடம் வாங்கும் எண்ணத்திலும் இருந்துள்ளனர்.
இறந்தவர் குடும்பத்தின் கடைசி மகன், இந்த தம்பதிக்கு சமீபத்தில் அதாவது மார்ச் 5, 2022 இல் திருமணம் ஆனது. மனைவியை அவருக்கு 6 வருடமாக தெரியும்.
அவரின் மனைவிக்கும் 24 வயது ஆகிறது, தற்போது அவர் மூன்று மாத கர்ப்பிணி பெண் ஆவார். இந்த குழந்தை தான் குடும்பத்தில் முதல் பேரக்குழந்தையாக இருக்கும்.
சாட்சிகளைத் தேடும் குடும்பம்
வலைத்தளம் வழியாக விபத்து தொடர்பான சாட்சிகளைத் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே ஒரு விபத்து அந்த குடும்பத்தையே புரட்டி போட்டுள்ளது. நாம் சிங்கப்பூர் சாலைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். நமக்காகவும் ஒரு குடும்பம் காத்திருக்கிறது.