சிங்கப்பூரின் NTUC FairPrice நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தள்ளுபடி வழங்கவுள்ளது.இந்தத் தள்ளுபடி அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் வரை வழங்கப்படும்.
இந்தச் சலுகையானது எல்லாப் பொருட்களுக்குமின்றி வாடிக்கையாளர்கள் அடிக்கடி வாங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சுமார் 500 பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பால் சார்ந்த பொருள்கள் போன்றவை அடங்கும்.அரிசி,முட்டை,சமையல் எண்ணெய் போன்றவற்றிற்கும் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு GST வரி 8 சதவீதத்திற்கு உயர்த்தப்பட உள்ளதைக் கருத்தில்கொண்டு மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் வகையில் நிறுவனம் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது.
FairPrice நிறுவனத்தின் இணைய விற்பனைத்தளங்கள் உட்பட எல்லாப் பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.