“சிங்கப்பூர்-மலேசியா” நில வழியான எல்லைகள் மீண்டும் இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன் படி, இன்று காலை ஏழு மணி நிலவரப்படி, 11,000க்கும் மேற்பட்ட பயணிகள் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளை கடந்துள்ளதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.
நில எல்லைகள் இன்று நள்ளிரவில் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் தனிமைப்படுத்தப்படாமலோ அல்லது COVID-19 சோதனைகளைச் செய்யாமலோ இரு நாடுகளுக்கு இடையே சுதந்திரமாகச் செல்ல முடியும்.
எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாகவும் ICA கூறியது.
ஒட்டுமொத்தமாக, குடிநுழைவு அனுமதி சோதனைகள் சீராக இருந்தது என்றும், மேலும் அதிகாலை 1 மணிக்குள் பயணிகள் வரிசைகள் எதுவும் இல்லை என்றும் ICA குறிப்பிட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் மலேசிய அதன் சுற்றுலா விசா சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.