சிங்கப்பூரில் மோசடியாளர்களின் வலையில், வெளிநாட்டு ஊழியர்களும், வீடுகளில் பணிபுரியும் பெண்களும் விழுவதாக காவல்துறை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் மாத்திரம், 3,181 வெளிநாட்டு ஊழியர்கள் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்தனர். 2020 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 1,965 ஆக இருந்தது. மற்ற ஊழியர்களைப்போலவே வீடுகளில் பணியாற்றும் பெண்கள் 357 பேர் ஏமாந்து போயினர்.
இந்த எண்ணிக்கை 2020ல் 216 என்ற அளவில் தான் இருந்தது. ஏமாற்றப்படுவது மட்டுமின்றி சேமிப்பு தொகை மொத்தமாக மோசடியில் இழந்து விடுகின்றனர்.
மோசடியாளர்கள் கடைபிடிக்கும் உத்திகள், தில்லுமுல்லுகள் பற்றி வெளிநாட்டு ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்காக சில தொண்டு நிறுவனங்களும், தங்குவிடுதி நடத்துவோரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பணச் சிரமங்களால், ஃபேஸ்புக்கில் வரும் போலியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.
சிங்கப்பூரில் 246,300 வீட்டு வேலை செய்யும் பெண்கள் பணியாற்றுகின்றனர். கட்டுமானம், கடல்துறை, தொழில்துறை ஆகியவற்றில் 318,400 வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றியதாக மனிதவள அமைச்சகம் தெரிவிக்கிறது.
வேலை தொடர்பான மோசடி, இணைய வர்த்தக மோசடிகள், மின்னஞ்சல் மோசடிகள் ஆகியவையே வெளிநாட்டு ஊழியர்களை குறி வைத்து மேற்கொள்ளப்படுகின்றன.
மின்னஞ்சல் மோசடி, இணையக்காதல் மோசடிகள், கடன் மோசடிகளில் வீடுகளில் பணியாற்றும் பெண்கள் அதிகம் சிக்குகின்றனர்.
மோசடிகளை எதிர்நோக்கும் ஊழியர்கள், தங்கள் முதலாளிகளை அல்லது வேலை நியமன நிறுவனங்களை உதவிக்கு நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.