கடலில் நீந்தி களிக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி பலியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லங்காவியில் உள்ள பந்தாய் செனாங்கில் 4 பேர் நீராடச் சென்றுள்ளனர். இதில் உடன்பிறந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அவர்களின் மகிழ்ச்சி சோகமாக மாறியது.
இறந்தவர்கள் பினாங், புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த ஆர்.யுவராஜ் (22) மற்றும் அவரது 26 வயது மூத்த சகோதரர் ஆர்.ரவிசங்கர் என அடையாளம் காணப்பட்டனர்.
இறந்த இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தை களிக்க லங்காவிக்கு 24 மற்றும் 25 வயதுடைய இரு ஆண் நண்பர்களுடன் சென்றதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் அன்று இரவு 7 மணியளவில் கடற்கரைக்கு நீந்தச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. பலியான இருவரும் 25 வயது நண்பருடன் நீந்தச் சென்றனர்.
அதே நேரத்தில் அவர்களின் இன்னொரு நண்பர் கடலுக்குள் செல்லவில்லை.
அப்போது ஏற்பட்ட பேரலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.
அதில் 25 வயது நண்பர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளார், அவர்கள் இருவரும் கடலுக்குள் மூழ்கி பலியாயினர் என்று அறிக்கையில் போலீசார் தெரிவித்தார்.