வீட்டு பணிப்பெண்ணின் டிக்டாக் காணொளியை முதலாளி எதர்ச்சையாக பார்த்தபோது, அவரின் சொந்த பணத்தை பெட்டியில் இருந்து எடுத்து வைத்துகொண்டு பணிப்பெண் டிக்டாக் காணொளி வெளியிட்டது தெரியவந்தது.
மறைந்த முதலாளியின் மாமியார் அவருக்கு வழங்கிய ரொக்கம் அடங்கிய சிவப்பு நிற பாக்கெட்டின் (red packet) காணொளி தான் அது.
இது என்ன நம் மாமியார் நமக்கு கொடுத்த கவர் போல உள்ளதே என்று முதலாளி பாக்கெட் வைத்திருந்த பெட்டியை சரிபார்த்தபோது, பல சிவப்பு நிற பாக்கெட்டுகள் காணாமல் போயிருப்பதை அப்போது தான் உணர்ந்தார்.
இந்நிலையில், இந்தோனேசிய நாட்டை சேர்ந்த 36 வயதான நூர்ஃபியாவதி தனது முதலாளியிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து, நேற்று (ஆகஸ்ட் 25) அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திரு சிம் யுவான் சான் (41) என்பவரிடம் நூர்ஃபியாவதி பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார்.
அவரது நான்கு வயது மகனை கவனித்து கொள்வது, சமைத்தல் ஆகியவை அவரது கடமைகளில் அடங்கும்.
2022 மே மாதம் சிம் குடும்பம் விடுமுறையை கழிக்க கொரியாவில் இருந்தபோது, நூர்ஃபியாவதி திரு சிமின் அறைக்கு சென்று அங்கிருந்து சுமார் 50 முதல் 60 வரை சிவப்பு பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டியைக் கண்டுபிடித்தார்.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் S$10 முதல் S$400 வரை ரொக்கம் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
2022 மே மற்றும் ஆகஸ்ட் 21 க்கு இடையில் குறைந்தது 32 முறை வாரம் இரண்டு என்ற அடிப்படையில் சிவப்பு பாக்கெட்டுகளை நூர்ஃபியாவதி தொடர்ந்து திருடி வந்துள்ளார்.
ஒரு நாள், திரு சிம் டிக்டாக்கில் வீடியோ பார்த்து கொண்டிருந்தபோது, நூர்ஃபியாவதியின் கணக்கு தென்பட்டது, அதில் சென்று பார்த்தபோது பணத்துடன் ரெட் பாக்கெட் வீடியோவை அவர் வெளியிட்டது தெரியவந்தது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்