50 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரை மிதிவண்டியில் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அக்டோபர் 1 அன்று நடந்த இந்த ஒரு நாள் பயண ஏற்பாட்டை வெளிநாட்டு ஊழியர்களுக்காக இயங்கும் இலாப நோக்கற்ற It’sRainingRaincoats அமைப்பு செய்தது.
இந்த பயணம் மூலம், வெளிநாட்டு ஊழியர்கள் சாங்கி விமான நிலையத்தின் ஸ்போக் & ஹப், கார்டன்ஸ் பை தி பே மற்றும் எஸ்பிளனேட் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
அன்பளிப்பாக பெறப்பட்ட புத்தம் புதிய மிதிவண்டிகளில் அவர்கள் பயணம் செய்தனர்.
சாங்கி ஏர்போர்ட் குரூப் மற்றும் சிங்கப்பூர் ராட்டினம் ஆகியவை இந்த ஏற்பாட்டுக்கு உதவின.
இந்த சைக்கிள் பயணம் சாங்கி ஏர்போர்ட் முனையம் இரண்டில் தொடங்கி, சிங்கப்பூர் ராட்டினத்தில் முடிந்தது.
“சிங்கப்பூருக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிறது, அப்போதிலிருந்து சிங்கப்பூரை சுற்றிப்பார்ப்பது இதுவே முதல் முறை” என்று வெளிநாட்டு ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
“சுமார் 8 மாதங்களாக வேலை செய்வது, தூங்குவது, சாப்பிடுவது…. என இருந்த எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது” என அவர் கூறினார்.
கட்டுமானத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்யும் மற்றொரு வெளிநாட்டு ஊழியர் கூறியதாவது:
“ஒரு நாளும் நான் இப்படி வெளியே சுற்றிப்பார்க்க சென்றதில்லை.., ஆனால் அந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது.. இந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” என்றார்.
ஊழியர்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுப்பு அளிக்கும் விதமாக இந்த சைக்கிள் பயணத்தைத் திட்டமிட்டதாக It’sRainingRaincoats கூறியது.