லிட்டில் இந்தியா, கேலாங் சிராய், சைனாடவுன், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாள்களிலும் செல்லும் முன்னர் தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சிறப்பு அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை உள்ளது.
புதிய நடைமுறை ஜூன் 24ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. பாதிப்பைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம் என கூறப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்திட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சிலரும், ஏற்படுத்தாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவையான பெரும்பாலான பொருள்கள், சேவைகள், வசதிகள் அனைத்தும் தங்குவிடுதியிலேயே கிடைத்துவிடுவதாக கூறினர்.
விடுதியில் தங்களுக்கு அனுமதிச்சீட்டைப் பற்றியும் அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிலருக்கு இதுவரை இந்த அனுமதிச்சீட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அனுமதிச்சீட்டிற்கு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினர்.
தங்குவிடுதிகளும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களும் இந்த அனுமதிச்சீட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகின்றனர்.
ஆனால், இத்திட்டத்தினால் கடை உரிமையாளர்கள் தங்களது வியாபாரம் மந்தமடையும் என அச்சம் கொண்டுள்ளனர்.
இத்தகைய திட்டத்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தேக்கா வருவது பெருமளவு குறைந்து விடும்.
தங்குவிடுதிகளிலேயே மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்கும் சிறிய கடைகள் இருப்பதால் வெளிநாட்டு ஊழியர்கள் தேக்கா வருவதற்கான தேவை பெரிதும் குறைந்துவிட்டது. ஆனால், இச்சிறு கடைகள் தேக்காவிலிருக்கும் மொத்த விற்பனைக் கடைகளிலிருந்து பொருளை வாங்கி, லாப நோக்கத்துடன் விலையை அதிகரித்து விற்க வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வாய்ப்பை அதிகரித்தாலும் வியாபார வேகத்தைக் குறைத்துவிடும்.