கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டோருக்கான சிறப்பு பயணப் பாதையை (Vaccinated Travel Lane- ‘VTL’) மேலும் சில நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. அதன்படி, கிரீஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு VTL பயணத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. அதேசமயம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ‘VTL’ பயணத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
மேற்கூரை பலகை தலையில் விழுந்து பெண்ணுக்கு ரத்தம் வழிந்தோடியது – நெட்டிசன்கள் அதிர்ச்சி
மலேசியாவின் பினாங்கு (Penang) நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ‘VTL’ விமான சேவை தொடங்கும். இந்த வழித்தடத்திற்கான விமான சேவை வரும் மார்ச் 16- ஆம் தேதி முதல் தொடங்கும். பினாங்குக்கும், சிங்கப்பூருக்கும் இடையே தினசரி நான்கு விமானங்கள் விமான சேவையை வழங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority of Singapore- ‘CAAS’) தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா நாட்டின் பாலி- டென்பசரில் (Bali-Denpasar) இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவைத் தொடங்கும். நாள்தோறும் இரண்டு விமானங்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சோதனை முறையில் ‘VTL’ விமானச் சேவையைத் தொடங்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாக, சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ‘VTL’ விமானச் சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடத்திங்களில் ‘VTL’ விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
‘VTL’ திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்வோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வரும் நாட்களில் அதிக பயணிகள் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.