கடந்த ஜூலை 8- ஆம் தேதி அன்று படுகொலைச் செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் (Former Japanese Prime Minister Abe Shinzo) இறுதிச் சடங்கு அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் நேற்று (27/09/2022) நடைபெற்றது. இதில் 100- க்கும் அதிக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று மரியாதைச் செலுத்தினர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டத் தலைவர்களும் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டனர். அந்த வகையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
“நான் சந்தேகிக்கிறேன் ” – இந்திய ஊடகத்திடம் பேசிய சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம்
இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜப்பானின் டோக்கியோவில் நேற்று பிற்பகல் ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோவின் இறுதிச் சடங்கில் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி திருமதி லீ ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்கள் ஷின்சோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி அபே அகி (Abe Akie) மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Japanese Prime Minister Kishida Fumio) ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் லீ சியன் லூங், பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து பேசினார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் சந்திப்பு கடந்த ஐந்து மாதங்களில், இது மூன்றாவது முறையாகும். சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் நெருங்கிய மற்றும் நீண்டகால உறவுகளை பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர், மேலும் டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை, ஆற்றல் மற்றும் பலதரப்பு வர்த்தகம் ஆகிய துறைகளில் ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தனர்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்து பிரதமர்கள் பயனுள்ள விவாதங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் நாடு திரும்பினார்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.