சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 3 முதல் மே மாதம் 2ஆம் தேதி வரை முஸ்லிம்கள் ரமலான் மாத நோன்பை மேற்கொள்ள உள்ளனர்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், பள்ளிவாசல்களில் பல்வேறு நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.
இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகளில் பங்கெடுப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (Muis) அறிவுறுத்தியுள்ளது.
COVID-19 காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ரமலானில் கூடுதலான சமய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய ரமலானுக்குத் திரும்புவதாக அர்த்தமாகாது என Muis நினைவூட்டி உள்ளது.
மேலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் வழிபாட்டில் ஈடுபடுவதை முஸ்லிம் சமூகத்தினர் எதிர்பார்க்கலாம் என அது கூறியது.
இருப்பினும், பள்ளிவாசல்களுக்கு வருவோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என Muis குறிப்பிட்டுள்ளது.
புனிதமிக்க ரமலானில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே நோன்பைத் துறந்துவிட்டு தங்களது குடும்பத்தாருடன் மஃரிப் தொழுகையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பள்ளிவாசலுக்குச் சென்று இஷா மற்றும் தராவிஹ் தொழுகையில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது.