சிங்கப்பூரில் பிறந்து, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கேயே வாழ்ந்துவந்த ரஷ்யப் பெண்ணால் இன்னும் சிங்கப்பூர் நிரந்தரவாசி – PR என்ற தகுதியை பெற முடியவில்லை.
ரஷ்ய நாட்டை சேர்ந்த எலினா ஸ்வெட்கோவா என்ற அந்த பெண் சிங்கப்பூரில் பிறந்தவர், மேலும் அவரது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கு தான் வாழ்ந்துள்ளார்.
ஆனாலும் அவரால் சிங்கப்பூரில் PR நிரந்தர வாசியை பெற முடியவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதி ஆலோசகராக பணிபுரியும் அந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) வீடியோ ஒன்றை வெளியிட்டார். 12 நிமிடம் அடங்கிய அந்த யூடியூப் வீடியோவில் தாம் EP – employment pass அனுமதியில் இங்கு இருப்பதாகக் கூறினார்.
“நான் இங்கே பிறந்திருந்தாலும் கூட, நான் ஒரு முழு வெளிநாட்டவர்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரைப் பற்றி பல வீடியோக்களை உருவாக்கிய யூடியூபர் மேக்ஸ் செர்னோவ் அவரைப் பேட்டி கண்டார்.
“நான் பிறந்தபோது, என் பெற்றோரிடம் வீட்டு முகவரி இல்லை. அதனால் அவர்கள் என் அப்பாவின் அலுவலக முகவரியைப் போட்டார்கள், அது 78 ஷென்டன் வேயில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தின் முகவரி..”, என்றார்.
ஆனால் அவர் ஒருபோதும் சிங்கப்பூர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று கூறினார்.
மேலும், “நான் PRக்கு விண்ணப்பிக்கலாம் என்று முயற்சி செய்வேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காது. நான் இன்னமும் கூட விண்ணப்பிக்கலாம் என்று முயற்சித்து கொண்டே இருக்கிறேன்” என்றார்.
தாம் ஒரு சிங்கப்பூரர் இல்லையென்றாலும் தன்னை ஒரு சிங்கப்பூரராகவே உணர்வதாக அவர் கூறினார்.