சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எல்லாமே முதலாளிகள் செலவு!

சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Settling-In Programme எனப்படும் ஒருநாள் அறிமுகப் பயிற்சித்திட்டம் நடத்தப்படுகிறது.

யாரெல்லாம் பயிற்சித்திட்டத்திற்குக் கட்டாயம் செல்லவேண்டும்?

முதன்முறையாகச் சிங்கப்பூரில் வேலைசெய்பவர்கள்,  தற்காலிக அடிப்படையில் வேலை அனுமதி பெற்றவர்கள் கட்டாயம் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

ஆண் ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்தவுடனும், பெண் ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்து 2 வாரங்களுக்குள் இந்த பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

சூன் லீயில் (Soon Lee) இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையத்தில் பெண்களுக்கும், வெளிநாட்டு ஊழியர் வரவேற்பு நிலையங்கள் (Onboard Centre) மூலம் ஆண்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் அதற்குச் சென்றபிறகே வேலை அனுமதி வழங்கப்படும். பயிற்சித்திட்டத்துக்குச் செல்வதற்கான கட்டணம் 75 வெள்ளி. அதனை முதலாளிகள் செலுத்துவர்.

பயிற்சித் திட்டம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மற்ற சில மொழிகளிலும் நடத்தப்படும். பயிற்சியில், சிங்கப்பூரைப் புரிந்துகொள்ளுதல், உள்ளூர்ச் சமூகத்தின் வழக்கங்கள், பிறருக்குப் பணம் அனுப்புதல், உரிமம் பெறாமல் மற்றவர்களுக்குக் கடன் அளிப்பவர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடிப்படைப் பராமரிப்புத் திட்டம், மருத்துவ நிலையங்கள், திறன்பேசிகளில் உள்ள செயலிகளின் தொடர்பான பயிற்சி, வேலைச் சட்டங்கள், வேலையில் அடிபடுவதன் தொடர்பில் இழப்பீட்டு உரிமைகள், SGSecure, மற்ற முக்கிய வேலைச் சட்டங்கள், மனநலன் குறித்து பயிற்சியில் சொல்லப்படும்.