யூனிக்லோவில் (Uniqlo) இருந்து ஆடைகளைத் திருடியதாக 4 இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடியிருப்பில் வசித்த மாணவர்கள் குழு ஒன்று, ஒன்றாக சேர்ந்து சதித் திட்டம் தீட்டி இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
4 இந்தியர்களுக்கு சிறை
கவுண்டர்களுக்குச் செல்வதற்கு முன், ஆடைகளின் விலை வில்லைகள் மற்றும் ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) சில்லுகளையும் அகற்றி அவர்கள் பைகளில் ஆடைகளை திருடி பிடிபட்டனர்.
அவர்களில் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்ட 4 இந்தியர்களுக்கு நேற்று புதன்கிழமை (நவம்பர் 22) 40 முதல் 65 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதில், ஷிஹோரா ரிதம் முகேஷ்பாய் என்ற 20 வயது இளைஞருக்கு 65 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல, 21 வயதான ஹன் ஸ்மித் அசோக்பாய்க்கு 45 நாட்கள் சிறை, 26 வயதான குவாடியா மிலன் கன்சியாம்பாய்க்கு 40 நாட்கள் சிறை மற்றும் சவுகான் ருச்சி சஞ்சய்குமார் என்ற 25 வயது பெண்ணுக்கு 50 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நால்வர் சிங்கப்பூரை விட்டு வெளியேறினர்
சிங்கப்பூரில் வெவ்வேறு பள்ளிகளில் படிப்பதற்காக மாணவர் அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வந்த இந்தியர்கள் குழுவில் அந்த நால்வரும் அங்கம் வகித்தனர் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர், திருட்டில் சம்மந்தப்பட்ட சிலர் விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே சிங்கப்பூரை விட்டு வெளியேறினர்.
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் திருட்டு
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள யுனிக்லோ கடையில் கடந்த அக்டோபர் மாதம் திருட்டு மற்றும் திருட்டு முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி மாலை, அவர்களில் ஒன்பது பேர் கொண்ட குழு யுனிக்லோ ஆர்ச்சர்ட் சென்ட்ரலுக்குச் சென்றது.
ஷாப்பிங் கூடைகளில் ஆடைகளை வைப்பதற்கு முன்பே அவர்கள் பல்வேறு ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் விலைக் குறிகளை அகற்றினர்.
பின்னர் பைகளுக்கு மட்டும் காசை செலுத்திவிட்டு, அதில் ஆடைகளை போட்டுகொண்டுவந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதாவது அவர்கள் சுமார் S$1,800 மதிப்புள்ள 64 திருட்டுப் பொருட்களுடன் கடையை விட்டு வெளியேறினர்.
இரண்டாம் திருட்டு
சில நாட்களுக்குப் பிறகு அக். 16 ஆம் தேதி அன்று, அதே யூனிக்லோ கடைக்கு ஆறு பேர் கொண்ட மற்றொரு குழுச் சென்று, அதே முறையைப் பயன்படுத்தி தங்கள் கூடைகளில் துணிகளை வைத்தது.
அப்போது கடையில் இருந்த பாதுகாப்பு காவலர் ஒருவர், பைகளில் துணிகளை அவசரமாக அடைத்துக்கொண்டிருந்த இருவரை கவனித்தார்.
பின்னர் பாதுகாப்பு காவலர் ரசீதை காட்ட சொன்னதை அடுத்து மழுப்பலாக பதில் சொல்லி அவர்கள் வெளியே சென்றதாக கூறப்பட்டுள்ளது.
போலீசில் புகார்
இதனை அடுத்து, திருட்டு முயற்சி குறித்து விற்பனை உதவியாளர் ஒருவர் அன்றைய தினமே போலீசில் புகாரை பதிவு செய்தார்.
பின்னர், கடையில் இருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருடர்களை அடையாளம் கண்டு, அக்டோபர் 30ம் தேதி அவர்களை கைது செய்தனர்.
இரண்டாவது குழு சுமார் S$2,300 மதிப்புள்ள 72 துணிகளைத் திருட முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துணை குற்றவாளிகள்
துணை குற்றவாளிகளான பிரம்மபட் கோமல் சேத்தன்குமார் மற்றும் கிறிஸ்டியன் அர்பிதா அரவிந்த்பாய் ஆகியோர் வியாழன் அன்று தங்கள் விசாரணைக்கு வரவில்லை.
அவர்கள் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு நீதிமன்றத்திற்குத் திரும்புவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.