சிங்கப்பூரில் சீக்கிரம் கட்டி முடிக்கப்படும் BTO வீடுகளின் தரம் இப்படித்தான் இருக்குமாம்!! நிறுவனம் அளித்த தகவல்…

Photo: TODAY

சிங்கப்பூரில் மக்களின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் BTO வீடுகளுக்காக பலரும் நீண்ட நாட்களாக காத்திருக்கின்ற நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அரசு முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, அடுத்த ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படக்கூடிய வீடுகளை அறிமுகம் செய்யப்போவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) அவர்கள் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது அறிவிப்பு குறித்து பலதரப்பினரிடம் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதால், அவற்றின் தரத்தில் பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி அதிகளவில் கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிங்கப்பூரில் புதிதாக கட்டி முடிக்கப்படும் வீடுகளின் கட்டுமானத்தில் உள்ள குறைகளைக் கண்டறியும் சேவைகளை வழங்கும் சில நிறுவனங்களை செய்தி ஊடகங்கள் தொடர்பு கொண்டுள்ளன. இது குறித்து Uncle Defect என்ற நிறுவனம் கூறுகையில், வீடுகள் சீக்கிரமாகக் கட்டி முடிக்கப்படுவதால் அவற்றின் தரம் குறையாது என்று தெரிவித்துள்ளது. அதுபோல, புதிய வீடுகள் தரமான கட்டுமானப் பொருள்களை வைத்து சிறப்பான முறையில் கட்டப்படுவதால் அவற்றின் தரம் பாதிக்கப்படாது என்று நம்புவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், சிங்கப்பூரில் கடந்த சில வருடங்களாக தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளின் உட்புற வேலைப்பாடுகளின் தரமும் மேம்பட்டிருப்பதாக Uncle Defect நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், குறைபாடுகளைக் கண்டறியும் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக SG Defect Scan நிறுவனம் தெரிவித்துள்ளது.

SG Defect Scan நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மாயில் அவர்கள், கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் இத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெவ்வேறு திட்டங்கள் வெவ்வேறு குத்தகைதாரர்களால் செய்யப்படுவதால், வேலைப்பாடுகளின் தரம் மாறுபடுவதாகவும் அத்துடன் விரைவாக வேலையை முடித்துவிட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் வீடுகளை ஒப்படைக்க அவர்கள் முற்படுவதால் பாதிக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, புதிய வீடுகளின் சாவியைப் பெற்ற நாள் முதல் ஓர் ஆண்டுக் காலத்திற்குள் வீட்டில் உள்ள குறைபாடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் தெரிவித்தால், அவை இலவசமாக சீரமைத்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.