சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health, Singapore), கொரோனா நோய்த்தொற்று குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் நேற்று (05/07/2022) மதியம் 12.00 மணி நிலவரப்படி, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 12,784 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில், 12,248 பேர் உள்ளூர் மக்கள் மற்றும் 536 பேர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் ஆவர். கொரோனா பாதிப்பு காரணமாக, சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,421 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 22- ஆம் தேதிக்கு பிறகு தற்போது அதிகமானோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மருத்துவமனைகளில் சுமார் 683 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 77 பேர் ஆக்சிஜன் உதவியுடனும், 16 பேர் ஐசியூவிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’73 வயதான இந்தியரை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம். மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமி நாசினிக் கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.