சிங்கப்பூரில் வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து அதிகரிக்கிறது. வீவக வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 24வது மாதமாக கடந்த ஜூன் மாதம் கூடியது. அதேபோல, தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகையும் தொடர்ந்து 18 மாதமாக அதிகரித்தது.
இருந்தாலும் சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் தாங்கள் அதிக பணத்தை தங்கள் குடும்பத்திற்கு அனுப்ப முடிகிறது என்று இங்கு வேலை பார்க்கும் மலேசிய ஊழியர்கள் கூறுகிறார்கள்.
தங்கள் நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பதும் தங்களுக்குக் கவலை தருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மலேசிய ரிங்கிட்டிற்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சாதனை அளவாக அதிகரித்து இருக்கிறது.
மலேசிய ரிங்கிட்டுக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இம்மாதம் 4ஆம் தேதி சாதனை அளவாகக் கூடியது. வெள்ளிக்கு 3.24 ரிங்கிட் என்ற அளவை எட்டியது. இந்தப் பரிவர்த்தனை விகி தம் ஓராண்டுக்கு முன் வெள்ளிக்கு 3.10 ரிங்கிட்டாக இருந்தது.
சிங்கப்பூர் நாணயம் இந்த வட்டாரத்தின் இதர நாணயங்களுக்கு எதிராகவும் மதிப்பு கூடியுள்ளது.
பணவீக்கத்தை மெதுபடுத்தும் நோக்கத்தில், நாணயக் கொள்கையை இறுக்குவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்தது. அதையடுத்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கூடி வருகிறது.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 900,000 மலேசியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்று கடந்த ஜூன் மாதம் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு வெளியிட்ட மதிப்பீடுகள் மூலம் தெரிகிறது. அவர்கள் இங்கேயே வசிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அன்றாடம் ஏறத்தாழ 300,000 பேர் வேலைக்காக இங்கு வந்து செல்கிறார்கள்.