பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 மணியளவில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 2023- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டில் அனைத்து சிங்கப்பூரர்களும் பயன்பெறும் வகையிலும், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளனர். அவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கொரோனா காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளைகள் நன்கொடைகளை வாரி வழங்கிய நிலையில், அதனை மேலும் ஊக்கப்படுத்தவும், தொடர்ந்து நன்கொடைகளை வழங்கவும் 250% வரிக்கழிவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2026- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர்களைக் குறைக்கும் வகையில், சிங்கப்பூரில் அனைத்து புகையிலைப் பொருட்களுக்கான வரி 15% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 14- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரி அதிகரிப்பால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
பணியிடங்களில் பாகுபாடா?? – உடைத்தெறிய அமலுக்கு வரும் புதிய சட்டம்…
2024- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி (அல்லது) அதற்கு பிறகு பிறக்கும் சிங்கப்பூரர் தம்பதிகளின் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் தந்தைக்கான சம்பளத்துடன் கூடிய விடுப்பு இரண்டு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் குழந்தையின் தந்தை சிங்கப்பூரில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 14- ஆம் தேதி முதல் பிறக்கும் தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் குழந்தை போனஸாக கூடுதலாக 3,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும். இதுவரை முதலாவது, இரண்டவாது குழந்தைகளுக்கு 8,000 சிங்கப்பூர் டாலர் போனஸாக வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இனி உயர்த்தப்பட்டு 11,000 சிங்கப்பூர் டாலராக வழங்கப்படும். மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் தொகை 10,000 சிங்கப்பூர் டாலரில் இருந்து 13,000 சிங்கப்பூர் டாலராக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.