வீடுகளில் நண்பர்கள், குடும்பத்தாருடன் விளையாடும் சூதாட்டங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் நடப்புக்கு வந்துள்ளது.
அத்தகைய சூதாட்டங்கள் இப்போது சட்டவிரோதமானவை அல்ல. இருந்தாலும் அவை பற்றி இப்போதைய சட்டங்களில் தெள்ளத்தெளிவான வரைமுறைகள் இல்லை.
எவை எவை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கான நெறிமுறைகள் புதிய சட்டங்களில் இடம்பெற்று உள்ளன.
சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற புதிய சட்டத்தின் கீழ் இதர பல மாற்றங்களும் அமலாகும். 21 வயதுக்கும் குறைந்தவர்கள் சூதாடுவது குற்றம் என்று புதிய சட்டம் தெரிவிக்கிறது.
புதிதாக அமையவிருக்கும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம், இப்போதைய ‘சூதாட்டக்கூட ஒழுங்குமுறை ஆணையத்தின்’ பணிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும்.
அத்துடன், சிங்கப்பூரில் எல்லா வகையான சூதாட்டங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாக புதிய ஆணையத்துக்கு மேலும் பல அதிகாரங்கள் இருக்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய சூதாட்ட பிரச்சினைத் தீர்வு மன்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய சமூக பாதிப்புகளை ஆணையம் குறைக்கும்.
அதேவேளையில், காவல்துறை தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை எடுத்து வரும். இந்த நடவடிக்கைகள் காரணமாக சூதாட்டப் போக்குகளும் தொழில்நுட்பப் போக்குகளும் எப்படியெல்லாம் தலைதூக்குகின்றன என்பதை அரசு நன்கு தெரிந்துகொள்ளும்.
சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ், குடும்பத்தாரும் நண்பர்களும் நேரடியாகச் சமூக சூதாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல் அல்ல. அதற்கு வயது வரம்பும் இல்லை.
ஆனால், அத்தகைய சூதாட்டங்கள் ஒருவரின் வீட்டில் நடக்கவேண்டும். எந்தவொரு தொழிலாகவும் அதை நடத்த முடியாது. இருந்தாலும் இணையம் மூலமான சமூக சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பிட்ட வயதை எட்டாதவர்கள் சூதாடுவது அல்லது சூதாட்ட இடங்களுக்குச் செல்வது ஒரு குற்றமாகும்.