சிங்கப்பூரில் புதிதாக 191 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 11) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 2,299ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர்
மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.
தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 528ஆக உள்ளது.
மருத்துவமனையில் உள்ளோர்
மருத்துவமனையில் இன்னும் 943 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.
மேலும், 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
820 நபர்கள் மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சம்பவங்கள்
52 நபர்களுக்கு முன்பு அறியப்பட்ட குழுக்களுடன் தொடர்பு உள்ளது, 20 பேர் முந்தைய பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
மேலும், மீதமுள்ள 119 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.
இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த சம்பவங்கள் எதுவும் இல்லை என்றும் MOH கூறியுள்ளது.
இதில் 51 நபர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புள்ளது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்கும் விடுதி, நார்த் கோஸ்ட் தங்கும் விடுதி, Cassia @ Penjuru ஆகிய மூன்று புதிய வைரஸ் தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.