தமிழக தோட்டக்கலைத்துறை சார்பாக, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசுமுறைப் பயணமாக ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 14- ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
தமிழக அமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் முக்கியமாக செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, மாதவரம் பூங்கா, வண்ணாரப்பேட்டை பூங்கா போன்ற இடங்களை பயன்படுத்தவும், சிங்கப்பூர் மற்றும் மேலைநாடுகளில் உபயோகப்படுத்துகின்ற பூங்காக்களின் தரத்திற்கு இணையாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையிலும் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களை மேம்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஜூலை 13- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவானது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது எனவும், பூங்காவில் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் இதர பூக்கள் வகையறா போன்றவைகள் குறித்து, சிங்கப்பூர் தேசிய பூங்காவின் முதுநிலை பூங்கா இயக்குநர் சூவா ஹாக் சியாங், துணை இயக்குநர் (நூலகம், பயிற்சி மற்றும் விரிவாக்கம், பாதுகாப்பு) பேராசிரியர் நூரா Bte. அப்துல் கரீம் ஆகியோர் அப்பூங்கா எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினர். இதனை தொடர்ந்து தேசிய தாவரவியல் பூங்காவின் துறை அலுவலர்களுடன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆய்வு செய்தனர்.
ஜூலை 14- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஜுவல் சாங்கி (Jewel Changi) பூங்காவினை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரை சார்ந்த உயர் அலுவலர் பிரபாகர், I.R.S. உடன் இருந்தார். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்திட தேவையான திட்டங்களை உருவாக்கிட சிங்கப்பூர் அரசு முறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது என்று வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.