புக்கிட் திமா அதிவிரைவு சாலை (BKE) நோக்கி சிலேத்தர் எக்ஸ்பிரஸ்வேயில் (SLE) 43 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது மனைவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கடந்த அக்.13 ஆம் தேதி மாலை 5 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தரையில் முகம் குப்புறக் கிடந்தார், அவரது தலையில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாவும் சொல்லப்பட்டுள்ளது.
பிறகு சோதித்ததில் அந்த ஆடவருக்கு நாடித்துடிப்பு இல்லை, மூச்சும் வரவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலமாக கீழே விழுந்ததில் இறந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்தவர் மற்றும் அவரது 38 வயது மனைவி இருவரும் மலேசியர்கள் என்று ஷின் மின் நியூஸ் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கி மற்றவர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன.