சிங்கப்பூரில் சுல்தான் பள்ளிவாசல் தங்க இருப்பிடம் இல்லாதவர்களுக்குத் தற்காலிக இடம் வழங்கவுள்ளது.
சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுல்தான் பள்ளிவாசல் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தங்க வீடில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஓய்வு எடுக்க தற்காலிக இடம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளிவாசலில் வழங்கப்பட்டுள்ள அறையில் ஐந்து பேர் வரை தங்கலாம். அதில் மின்விசிறி, மெத்தை, தண்ணீர் பாட்டில் ஆகிய வசதிகள் அடங்கியுள்ளன. அந்த அறையில் இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணி வரை அங்கு தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இனம், சமயம், சாதி பாராமல் அனைவருக்கும் இடம் அளிக்கப்படும். முதலில், அறையைப் பயன்படுத்த பள்ளிவாசலின் பாதுகாவலர்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தற்போது அங்கு ஆண்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீடில்லாதவர்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஏற்படுத்தித்தரும் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.