சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டு ஊழியர் கஷ்டப்பட்டு வாங்கிய எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்து தீக்கு இரையானது.
முருகேசன் என்ற அவர், தமிழ்நாட்டின் திருச்சி – மணப்பாறை பகுதியை சேர்ந்தவர். சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வரும் அவர் 5 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று ஆசையாய் எலக்ட்ரிக் பைக் ஒன்று வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் விடுமுறை காலம் முடிவுக்கு வர கடந்த சனிக்கிழமை சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இதனை அடுத்து, தன்னுடைய எலக்ட்ரிக் பைக்கை முருகேசன் தன் நண்பர் பாலு என்பவரின் கடையில் விட்டு விட்டு சிங்கப்பூர் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் (மார்ச் 28) பாலு கடையை திறந்துள்ளார். அப்போது நாற்றம் கிளம்பியுள்ளது, என்ன என்று பார்த்தபோது எலக்ட்ரிக் பைக்கில் இருந்து புகை கிளம்பியுள்ளது. அதனை அடுத்து பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவி செய்ய அந்த தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தாம் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய பொருள் இப்படி ஆகிவிட்டது என்று ஊழியர் வருத்தத்தில் உள்ளார்.