துவாஸ் மேம்பாலம் கீழ் 32 வயது பெண்ணை நாசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆடவர்கள், மனநல கண்காணிப்புக்காக தடுப்பு காவலில் இன்று வியாழன் (மார்ச் 17) வைக்கப்பட்டனர்.
துவாஸ் வெஸ்ட் ரோடு MRT நிலையம் அருகே கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் 2.20 மணி வரை இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இதில் 30 வயதான அகமது ரெய்ஹான் மற்றும் 36 வயதான ஆலம் ஃபோய்சல் ஆகியோர் அந்தப் பெண்ணை சீரழித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
இருவரையும் சாங்கி சிறை வளாக மருத்துவ நிலையத்தில் மூன்று வாரங்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது ?
அன்று காலை 7.25 மணியளவில் 32 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சுயநினைவுடன் பயனியர் சாலையில் காணப்பட்டதை அடுத்து, உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், அந்த பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் பல இருந்ததாக போலீசார் கூறினர். பின்னர் சுயநினைவுடன் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், காயங்கள் அடைப்படையில் அவர் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவீர விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் கேமராக்கள் உதவியுடனும், புகார் பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணை
முதற்கட்ட விசாரணையில் இரு ஆண்களும் அந்த பெண்ணை முன்னர் அறியாதவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பயனியர் சாலையில் கொண்டு வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.