அரசாங்க ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக 53 வயது ஆடவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று இரவு 8 மணியளவில், ரெட்ஹில் ஃபுட் சென்டரில் நடந்த சண்டை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பை (NEA) சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உணவு நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டனர், அப்போது அந்த ஆடவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து விசாரித்தபோது, அந்த ஆடவர் ஆத்திரத்தில் இரண்டு NEA அதிகாரிகளையும் குத்தியதாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து, உதவி வேண்டி போலீசார் அங்கு அழைக்கப்பட்டனர், அதன் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இன்று ஜன. 14ம் தேதி, அரசாங்க ஊழியரைத் தன் கடமையைச் செய்யவிடாமல், தானாக முன்வந்து காயப்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது நீதிமன்றத்தில் சுமத்தப்படும்.
இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.