ஆர்ச்சர்ட் சாலையில் 69 வயதுமிக்க பெண் ஒருவர் பிறரிடம் பணம் கேட்டது தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷின் மின் டெய்லி நியூஸ் வாசகர் ஒருவர், அந்தப் பெண்ணை கடந்த ஜூலை முதல் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.
அந்த பெண் ஒவ்வொரு ஞாயிறும் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசாவிற்கு அருகில் காணப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது காலை 10 மணி முதல் 11 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கு இருப்பார் என்றும் அவர் கூறினார்.
கையில் லக்கேஜ் உடன் சுற்றி திரியும் அந்த பெண், உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்காக மற்றவர்களிடம் பணம் கேட்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது நடத்தை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கலாம் என்ற கவலையில் கடந்த அக்.8 அன்று வாசகர் போலீசை அழைத்ததாக கூறினார்.
உள்ளூர் மக்களிடம் பணம் கேட்காத அந்த பெண், மாறாக வீட்டு பணிப்பெண்களை போல தோற்றமளிக்கும் நபர்களிடம் மட்டுமே பணம் கேட்பதாக ஷின் மின் கூறியுள்ளது.
இந்நிலையில், அங்கு வருகை தந்த போலீஸ் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வீடு மற்றும் தெருக்களில் பணம் கேட்கும் சட்டத்தின்கீழ், உரிமம் இல்லாமல் தெருக்களில் நின்றுகொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலிப்பவருக்கு S$5,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.