வரும் 2024 ஜனவரி 25- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று சிங்கப்பூரில் ‘தைப்பூசத் திருவிழா- 2024’ வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரில் அதிகரிக்கும் COVID-19 தொற்று…”எதையும் கையாள தயார்”
‘தைப்பூசத் திருவிழா- 2024’-ல் பங்கேற்கவுள்ள பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 16 வயதிற்கு உட்பட்ட பக்தர்கள் பால்குடம் அல்லது பால் காவடி எடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். 16 வயதிற்கு குறைந்தவர்களுக்கு கொக்கிகளும், அலகுகளும் குத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
அலகு அல்லது இரதக் காவடி எடுப்போர் தங்களுக்கு துணை வருவோரில் ஒருவரை காவடி பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். அவரின் வயது 21- க்கும் மேலாக இருக்க வேண்டும். காவடி எடுப்பவரும், காவடி பிரதிநிதியும் தங்கள் குழுவில் இடம் பெறுவோரின் நடத்தைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
உடல்நலக் குறையுள்ள பக்தர்கள் (உதாரணமாக, சர்க்கரை நோய், இருதய நோய், இரத்தக் கொதிப்பு) தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு காவடி எடுப்பதைப் பற்றி முடிவு எடுக்கவும். அலகு, இரதக் காவடி எடுக்கும் பக்தர்கள் ரேஸ்கோர்ஸ் சாலை நுழைவாயில் வழியாக பெருமாள் கோயிலுக்குள் வர வேண்டும்.
முடிக் காணிக்கை செலுத்துவோரின் வசதிக்காக ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு அடுத்துள்ள Teochew கட்டிடத்தின் அருகில் உள்ள மைதானத்தில் முடியிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பால் காவடி, அலகு, இரதக் காவடிச் சீட்டுகளை www.thaipusam.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.