வெளிநாட்டு ஊழியர் ஒருவர் போலியான அழைப்பை நம்பி $3,400 வெள்ளியை இழந்ததாக கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தாஸ் என்ற 31 வயதான அந்த ஊழியர், சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளாக எலக்ட்ரானிக் லாக் நிறுவனத்தில் சர்வீஸ்மேனாக பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை மூடவுள்ள நிறுவனம் – 300 ஊழியர்களுக்கு வேலை இல்லை
கடந்த பிப்ரவரி 25 அன்று மதியம், போலீஸ் சீருடையில் இருந்த ஒருவரிடமிருந்து தனக்கு “வீடியோ கால்” வழியாக அழைப்பு வந்ததாக தாஸ் கூறினார்.
அதில் தாம் சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று கூறிய மோசடிக்காரர், சமீபத்தில் பலர் வங்கிப் பரிமாற்றங்களில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தாஸிடம் கூறினார்.
“ஆகவே, உங்களின் வங்கிக் கணக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், மேலும் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்போர்ட் விவரங்களைச் சோதிக்க வேண்டும்” எனவும் மோசடிக்காரர் கேட்டுள்ளார்.
அவரது வார்த்தைகளை நம்பிய தாஸ், அவர் கேட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து, வங்கியில் இருந்து அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகள் குறித்து எச்சரிக்கை செய்யும் சில மின்னஞ்சல்களை தாஸ் பெற்றார்.
அதில், முதல் பரிவர்த்தனை $1,400, அதைத் தொடர்ந்து $1,900 மற்றும் மற்றொரு பரிவர்த்தனையில் $100 என மொத்தம் $3,400 தொகையை அவர் இழந்ததாக மின்னஞ்சல் வந்தது.
மாதம் $2,900 சம்பாதிக்கும் தாஸ், “இது எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்” என கண்ணீரோடு கூறினார்.
“ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டும், மேலும் வாடகையையும் செலுத்த வேண்டும்..” எனவும் குறிப்பிட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு மோசடிக்காரரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிய தாஸ், இது குறித்து போலீஸ் புகார் செய்ததாக கூறினார்.
இது குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் கூறினர்.
“79 ஊழியர்களுக்கு வேலை இல்லை” – பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் நிறுவனம்