இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று (15/08/2022) இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கொடியை ஏற்றிய நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி வைத்தனர். அத்துடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை சால்வை அணிவித்து மரியாதைச் செய்தனர்.
அதேபோல், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திரத் தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடினர். உலக நாடுகளின் தலைவர்கள், இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை அந்நாட்டு மக்களுக்கும், தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் சுதந்திர தினத்தை இந்தியர்களுடன் கொண்டாடியது.
சிங்கப்பூரில் உள்ள 31 கிரேன்ஜ் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று (15/08/2022) காலை 08.30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார். பின்னர், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், புலம்பெயர்ந்த தொழிலதிபர்கள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.