தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில் குமார் இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உள்ளிட்டோரும் இங்கு வந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற 7வது உலக சுகாதார மாநாட்டில் (7th World One Health Congress) கலந்துக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நுண்ணுயிர் எதிர்ப்பு பாதை- தென்கிழக்கு ஆசியாவில் தொற்று நோய்கள் அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், சிங்கப்பூரில் மிகப்பெரிய மருத்துவமனையான சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகளை நேரில் பார்வையிட்டதுடன், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து, லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூர் வாழ் தமிழர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சரை தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூர் வந்த நாள் முதல் நாள்தோறும் அதிகாலைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (09/11/2022) அதிகாலையில் ‘Bedok Resorvoir’ பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் “World one health congress ல் கலந்துகொள்ள வந்துள்ள நாம் இன்று அதிகாலை நண்பர்களுடன் ‘Bedok Resorvoir‘ பகுதியில் சற்றொப்ப 14 கிமீ தூரம் இன்றைய பயிற்சியை முடித்தோம்….” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.