இந்த மாதத்தில், சிங்கப்பூரில் அமைந்துள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளச் சின்னங்களில் நீல நிற ஒளியூட்டு இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் தொடர்பான சுகாதார விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, உலக மனநல சுகாதார நாள் வரும் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த மாதம் இறுதி வரை மரினா பே சேண்ட்ஸ், செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், பூந்தோட்டங்கள் போன்றவை நீலநிறத்தில் மின்னும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, டான் போக் செங் மருத்துவமனை, மனநல சுகாதாரப் பராமரிப்பு கழகம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்றவையும் நீலநிறத்தில் மின்னும்.
நீல நிற ஒளி மூலம் மனநல சுகாதாரப் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையை விதைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.